வெற்றி பெற்றோம் என்ற திமிர் வீழ்த்தும் உம்மை(ண்)

blog image

ஈழத்துத் தமிழரெலாம் இணைந்து கூடி

இன அழிப்பை எதிர்க்கின்ற முறைமை நாடி

ஆழத்து அவலங்கள் அனைத்தும் சொல்ல  

அமைதிவழி கண்டார்கள் அதுவும் தப்பா ?

கூழத்தைக் குப்பையினைக் கொழுத்தல் போலே

குலத்தோடு அழித்தாலும் கேட்கொணாதோ ?

வேழத்தை வேங்கையினை வீழ்த்திவிட்டோம்

வெற்றிபெற்றோம் என்றதிமிர் வீழ்த்தும் உம்மை(ண்)

 

உறவுகளைத் தேடுகின்ற உரிமை தப்பா ?

உடல் பொசுக்க வேண்டாம் என்றுரைத்தல் தப்பா ?

அறவழியில் ஆண்டாண்டாய் வாழ்ந்த எங்கள்

அவனியினை அபகரிப்பீர் எதிர்த்தல் தப்பா ?

இரவிரவாய் முளைக்கின்ற புத்த கோயில்

இங்கெதற்கு என்றுரைத்தால் அதுவும் தப்பா ?

அரசேற்கும் போதுரைத்த அகிம்சை எல்லாம்

அரை ஆண்டில் அடியோடு அழிந்ததேப்பா!

 

சிறுபான்மை இனந்தானே சிதைப்போம் என்ற

சிந்தனையை மாற்றுங்கள் செழிக்கும் நாடு

அறம்பேணி ஆளுங்கள் அனைவர் தம்மை

அன்பாக நடத்துங்கள் அகிம்சை ஓங்கும்

வெறுப்பூற்றி வேர்வரையில்ப்; பகையைப் பாச்சி

வென்றனம் என்றேப்பமது விடுதல் ஈனம்

கொன்றொழித்துக் கொலைபுரிந்து கொழுத்தித்தள்ளி

கோசமிட்டு வெற்றிவிழாக் கண்டீர் மோசம்

 

கால்நோக வழிநடந்து களைத்து வெந்து

காற்று மழை வெயில் குளித்து நீதி கேட்டு

மேல் விழுந்து சிற்றினங்கள் துடிக்கும் போது

மேன்மையின்றித் தருக்குற்று மேவி நிற்பீர்

சால்பிழந்து சதி புரிந்து சமரில் ஏய்த்து

சாகடித்துச் சகம் அறியச் செய்த தப்பை

நீள் கதையாய்ப் பொய்யுரைத்து மறைக்கலாமோ ?

நிலவுலகம் அதைப்பார்த்து இருக்கலாமோ ????

 

உலகறியத் தமிழரெலாம் ஒன்று சேர்ந்து

உரிமைக்காய் குரல் கொடுப்போம் உயிர்த்து வாரீர்

பலமெனநாம் ஒன்றிணைந்து பகையை வென்று

பாரறியத் தனி உரிமை பெறுவோம் வாரீர்

கலகமதால் கதறவைத்துக் களித்து வென்று

கைதட்டும் இனவெறியர் தலைகள் வீழும்

சிலதினங்கள் பொறுப்போம் நாம் சிகரம் வெல்வோம்

சிதைத்தவர்கள் சிதைசேர்வார் சிறக்கும் அறமே

 

 

Share :
Tag :
Comments