நான் செய்த பேறுதான் யாவதோ?

blog image

பெற்றதாயினும் பெரிதுவந்து எனைப்பேணி

பேர் புகழ் பரிசெனப் பெற்றிடச் செய்பவள்

கற்றதோர் துளியதில் காசினி வெல்லெனக்

காட்டியபாதையில் கவிதைநெய் தருபவள்

விற்பனைப்பொருளென வீதியில் விட்டிடாள்

வீம்புடன் வாழ் என வரம் தந்து பேணுவாள்

மற்றுமோர் மொழி நானறியேன் இவள்

மையலில் என் உயிர் வாழும் உண்மையே

 

அன்னை மொழி இவள் ஆயுள் முழுவதும்

ஆண்டுகொண்டின்புற வேண்டினின்றேன்

கன்னல் கவிச்சுவை காச்சிய பாகிவள்

காலத்தை வென்றென்னுள் ஊற நின்றேன்

முன்னைத்தவப்பயன் போலும் என்னை இவள்

மூண்டதிக்காதலில் மூழ்கவைத்தாள்

பின்னைப் பிறவிகள் ஆயிரம் உண்டெனில்

பேணிடுவாய் அம்மா பிள்ளை என்னை

 

கம்பன் எனும் கவி நெஞ்சில் நிறைந்திடக்

காரணம் இங்கிவள் தண்ணளியே

நம்பும் இறையருள் நான் பெற்று இன்புற

நல்லருள் ஈந்ததும் இங்கிவளே

தெம்புதரு புகழ் தென்னவள் என்னையும்

தேடி அழைத்தினிதாண்டனளே - எந்தக்

கொம்பனும் என்னை எதிர்க்க நினைக்கையில்

கொல்கரம் கொண்டெனைக் காப்பவளே

 

பிஞ்சு வயதில் என் காதருகே இவள்

பிள்ளைக் கதையென வந்து நின்றனள்

நெஞ்சு நிறைந்திட நீதிநெறி நிறை

நேயக்கவிகளில் நீந்த வைத்தனள்

பஞ்சினை விஞ்சிய மெல்லியலாள் இவள்

பாதமதைப்பற்றி மேலெழுந்தேனரோ

தஞ்சமென இவள் தாமரைப் பாதங்கள்

தாங்கிட நான் செய்த பேறுதான் யாவதோ?

 

Share :
Tag :
Comments