மோகத்தைக் கொன்றுவிடு

blog image

பெண்ணவளின் மென்னழகை பேறென்று எண்ணும்

விண்ணளவாய் வாஞ்சை கொள்ளும் - நன்மனது  

பித்தேறும் பிரமையுறும் பிறர் நகைக்க நிற்கும்

செத்தேனும் காதல் செயும்

 

கல்வியதைக் கருதாது காசு உழைக்க மேவாது

அல்லலதைக் கூட அது அலட்டிக்-கொள்ளாது  

கண்ணிலே தோன்றி கருத்திலே நிலைகொண்ட

விண்ணமுதை விண்டுரைக்கும் வியந்து

 

கனவுலகில் நீந்தும் கண்ணாடி முன் நிக்கும்

அனவரதமும் அழகு பேணும் - நினைவிழந்து

புறச்சட்டை போடும் பிறஸ் இன்றிப் பல்துலக்கும்

குறைத்தூக்கம் கொள்ளும் குறி

 

பெற்றோரை மதியாது போராடக் கூசாது

கற்றோரை நாடிக் களியாது - குற்றுயிராய்

மனங்கொண்ட பெண்ணை மன்றாடித் தொழுதேற்றி

அணைத்தின்பம் காணும் அது

 

உடல் மெலியும் உழைப்பிழக்கும் உணவின்றித்திரியும்

கடல் மலையை காலடியாய் எண்ணும்-விடலறியா

விருப்பதனில் வீழ்ந்து வீட்டுசுகம் தான் எய்தும்  

நெருப்பணைத்து நேசமுறும் நெஞ்சு

 

கட்டி அணைக்கும் கண்ணீரைத் தான் கொட்டும்

எட்டி தொலைவிருந்தால் ஏக்கமுறும் - கிட்டவந்தால்

முகம் திருப்பி நின்று முரண் கொள்ளும் சிறுபொழுது

அகம்மகிழ்ந்து அன்பூட்டும் அது

 

கூடிமகிழும் குவலயத்தின் நினைவிழக்கும்

நாடி நலம் துய்த்து நன்றுரைக்கும் - வாடிநிதம்  

பிரிவுற்றால் ஏங்கும் பிணம் போல ஆகும்

அருகுற்றால் உயிர்க்கும் அது

 

உண்டசுவையும் சலிக்கும் உடைவிருப்பும் அற்றுப்போம்

பண்டுமுதல் பற்றியவை பறிபோகும் -பெண்ணழகோ

உற்று உடன்பிறந்த உயிர் போல நிலை கொண்டு

பற்றுதே பாழ்மனதைப் பார்

 

Share :
Tag :
Comments