பெண்ணவளின் மென்னழகை பேறென்று எண்ணும்
விண்ணளவாய் வாஞ்சை கொள்ளும் - நன்மனது
பித்தேறும் பிரமையுறும் பிறர் நகைக்க நிற்கும்
செத்தேனும் காதல் செயும்
கல்வியதைக் கருதாது காசு உழைக்க மேவாது
அல்லலதைக் கூட அது அலட்டிக்-கொள்ளாது
கண்ணிலே தோன்றி கருத்திலே நிலைகொண்ட
விண்ணமுதை விண்டுரைக்கும் வியந்து
கனவுலகில் நீந்தும் கண்ணாடி முன் நிக்கும்
அனவரதமும் அழகு பேணும் - நினைவிழந்து
புறச்சட்டை போடும் பிறஸ் இன்றிப் பல்துலக்கும்
குறைத்தூக்கம் கொள்ளும் குறி
பெற்றோரை மதியாது போராடக் கூசாது
கற்றோரை நாடிக் களியாது - குற்றுயிராய்
மனங்கொண்ட பெண்ணை மன்றாடித் தொழுதேற்றி
அணைத்தின்பம் காணும் அது
உடல் மெலியும் உழைப்பிழக்கும் உணவின்றித்திரியும்
கடல் மலையை காலடியாய் எண்ணும்-விடலறியா
விருப்பதனில் வீழ்ந்து வீட்டுசுகம் தான் எய்தும்
நெருப்பணைத்து நேசமுறும் நெஞ்சு
கட்டி அணைக்கும் கண்ணீரைத் தான் கொட்டும்
எட்டி தொலைவிருந்தால் ஏக்கமுறும் - கிட்டவந்தால்
முகம் திருப்பி நின்று முரண் கொள்ளும் சிறுபொழுது
அகம்மகிழ்ந்து அன்பூட்டும் அது
கூடிமகிழும் குவலயத்தின் நினைவிழக்கும்
நாடி நலம் துய்த்து நன்றுரைக்கும் - வாடிநிதம்
பிரிவுற்றால் ஏங்கும் பிணம் போல ஆகும்
அருகுற்றால் உயிர்க்கும் அது
உண்டசுவையும் சலிக்கும் உடைவிருப்பும் அற்றுப்போம்
பண்டுமுதல் பற்றியவை பறிபோகும் -பெண்ணழகோ
உற்று உடன்பிறந்த உயிர் போல நிலை கொண்டு
பற்றுதே பாழ்மனதைப் பார்
Comments