சனி படும் பாடு

blog image

உலகமெலாம் வாழுகிற உயிரின் கூட்டம்

  உடல் நடுங்க உண்டான சனியின் மாற்றம்

பலமிழக்கப் பற்றியவர் பாதை மாற்றி

  பதறவைக்கப் போகிறதாம் பாரே அஞ்சி

குலமுடனே தொழுகிறது கூட்டம் சேர்ந்து

  கூட்டொழித்த கோரோனாப் பயத்தைத் தாண்டி

விலகிடுமா வழிபாட்டால் விதியின் காட்டம் ?

  விடைதேடும் என்விழிகள் தூக்கம் நீங்க

 

பெருகு புகழ் பெருஞ்செல்வம் பேணும் சொத்து

  பேறெனவே கொண்டாடும் நலங்கள் யாவும்

அருகிடுமாம் அவரவரை வறியராக்கி

  அலைக்கழித்து ஆட்டிடுமாம் அம்போ என்று

தெருவினிலே நிக்க வைத்துத் திகைக்கச் செய்து

  திண்டாட்டம் கொடுத்திடுமாம் வியப்பு என்னே!

திருவிழக்க வைத்தடிமை கொள்ளும் அந்தோ !

  தெய்வ வழிபாடென்றே துணையாம் கண்டோம்

 

சாத்திரிமார் ராசிக்குத் தொல்லை இல்லை

  சரஞ்சரமாய் சாற்றுகிறார் பொய்யின் மாலை

காத்திடுங்கள் விரதநெறி ஒருவர் சொல்வார்

  காசு கொஞ்சம் செலவாகும் ஒருவர் கேட்பார்

பூத்திடுமே புதுவாழ்க்கை பொருட்கள் தாரும்

  புகன்றபடி நடவுங்கள் நலங்கள் சேரும்

மாத்திடுவேன் உம் வாழ்வை மகிமை பொங்க

  மந்திரங்கள் செபித்தபடி ஒருவர் சொல்வார்

 

கைரேகை காட்டுங்கள் கண்ணை மூடி

  கடவுளிடம் பேசுகிறேன் என்றாற் போல

மை போட்டு மௌனித்து மனதுள் பேசி

  மருட்டிடுவார் சிலபேர்கள் என்தான் சொல்ல!

நைய்யாண்டித்தனம் காண நகைப்பே தோன்றும்

  நாலு உதை கொடுத்தால்தான் மனதே ஆறும்

பொய் காட்டி பொய் வளர்க்கும் புழுகர் வாயில்

  புகுந்து சனி படும் பாடு பெரிய பாடே!

Share :
Tag :
Comments