குறும்பா

blog image

மதம் பரப்ப விரைந்து வந்தார் பாதர்

மன்றாடித் தொழுது நின்றார் மாதர்

இதம் தருவார் என்றிருந்து  

ஏங்கியவர் யாவருக்கும்

நிதம் வருந்த நோய் கொடுத்தார் போதர்

 

அறிவியல்

 

உலகியல் தான் உண்மை என்றார் மூடர்

உணரவில்லை ஊழ்வலியின் ஓடர்

விலங்கொடு சேர் பறவை இன

விஷத்தையெல்லாம் விழுங்கியின்று

பலமிழக்க நோய் கொடுத்தார் வேடர்  

 

அரசு

 

வீட்டுக்குள்ளே இருக்கும்படி சொன்னார்

விஞ்சு பசி போக்க வழி பண்ணார்

வோட்டுப்பிச்சை கேட்டு வந்து

வாசலிலே நின்றபின்பு

நாட்டு நிலை எதைக்கண்டார் அன்னார்

 

பெண்ணியம்

 

ஆண் பெரிதா பெண் பெரிதா போட்டி

ஆயுளெலாம் இப்பகையை மூட்டி

வீண் பெருமை பேசியொரு

விழல்க் கூட்டம் அலைகிறது

தாண்டவொண்ணா ஆணவத்தைக் காட்டி  

 

வறுமை

 

தினம் உழைத்து உண்டு வந்தான் காந்தன்

திண்டாட்டம் அறியா நற் சாந்தன்

வனவாசம் புக்கது போல்

வந்துதித்த ஊரடங்கால்

கனநாளாய் உணவிழந்தான் அவ் வேந்தன்  

 

ஊழ்;

 

வல்லரசும் மாழ்கிறது நோயால்

வந்துதித்த கோரோனாப் பேயால்

எல்லையில்லை எம் வளர்ச்சிக்

என்றேப்பம் விட்டவரை

தொல் இறைவன் நகைக்கின்றான் வாயால்

 

தோசம்

 

முடமுற்றுக் கிடக்கிறது தேசம்

முன் விளைவால் வந்ததிந்தத் தோசம்

தொடர்புற்ற உறவுகளை

தொலை தூரம் விலக்கி வைத்து

துடக்காக்கி விட்டதையோ! மோசம்  

 

துடக்கு

 

ஆலயங்கள் செல்ல வேண்டாம் அனைவருமே கண்டீர்

ஆண்டொன்று பிறந்ததினால் துடக்கெல்லோ கண்டீர்

காலமுற ஓர் மாதம்

காத்திருந்து பின்பு

நீலமணி மிடற்றானை நேர்ந்திடலாம் தொண்டீர்

 

 

அரசியல்வாதி

 

மக்கள் துயர் துடைப்பதெங்கள் சேவை

மாற்றமில்லை அதுவே நம் கோவை

திக்கறியாதிருள் சூழ்ந்து

திகைப்புற்றிருக்கின்ற

இக்கணமும் தேர்தல்தான் தேவை

 

 

தனித்திரு

 

ஊரடங்கு எடுத்தாச்சு என்று  

உருண்டோடித்திரியாதே கன்று

ஆருன்னை நெருங்குதற்கும்  

அனுமதியாதே தம்பி

பேருந்தில் கூட இது நன்று

 

முயற்சி  

 

சுந்தரம் என்பான் பிறப்பால் ஏழை

சுமை பலதால் நொந்தழிந்தான் காளை

வெந்துயரம் வாட்டயிலும்  

விட்டகலா உழைப்பதனால்

முந்து செல்வம் பெற்றிடுவான் நாளை  

 

 

Share :
Tag :
Comments