யாரொடு நோவேன்

blog image

உன்னதமாம் மனிதத்தின் உயரம் தாண்ட

ஊற்றெனனான் அறிவதனின் பாதை தேடி

அன்னமொடு நீர் தூக்கம் அனைத்தும் நீத்து

ஆண்டுபல முயன்றிடவும் சித்தம் கொண்டேன்

திண்ணமொடு தீவிரமாய்த் திறங்கள் சேர்த்து

தீயாக நான் வேகித்தகித்த போதும்

மன்னு புகழ் மாயை அவள் மனதில் பூந்து

மாமாயம் பண்ணுகிறாள் யாரொடு நோவேன்

 

புத்தகத்தில் கை வைக்கப் புகுந்தால்ப் போதும்

புதிதாகத் தடை நூறு அவளே செய்வாள்

நித்திரையைப் பசியதனை நீண்ட நோயை

நீலியவள் தந்தெந்தன் நெறியை மாற்றி

கத்திரிக்குள் அகப்பட்ட கயிற்றைப் போலே

கால் வேறாய்த் தலைவேறாய் சிதைப்பாள் பாவம்

வித்தகன் நான் வேறு வழி ஏதும் இன்றி

விரல்பிடித்த குழந்தையென அவள்பின் செல்வேன்  

 

யூடியூப்பில் நல்லோர்தம் பேச்சைப் போட்டால்

யுவதிகளின் குத்தாட்டம் மனதை ஏய்க்கும்

நாட்டினது நடப்பேனும் அறிவோம் என்றால்

நாலு செய்தி அறியுமுன்னே நடிகை நிற்பாள்

காட்டுகிற கவர்ச்சியினால்க்; காலந்தோறும்

கட்டறுந்த என்மனது களிப்புக் கொள்ளும்

பாட்டெழுதப் புகுந்தாலோ பாவி என்னை  

பாழ்மனது வெல்லுதய்யோ யாரொடு நோவேன்

 

படிக்க எனப் பக்குவமாய் அமரும் வேளை

பாதியொரு தேங்காயைத் துருவித்தாரும்

அடுப்படியில் இருந்தபடி அன்பாய் கேட்கும்

அகமுடையாள் வேண்டுதலை மீறலாமோ ?

விடிந்தபடி விழித்திருக்கும் பொழுது நீண்டு

விஞ்சுமிருள் கூடாதேல் மறுத்தல் கூடும்

துடித்தெழுந்த இளமையது தொலைந்தால்த்தானே

துறவுடனே துணிந்திருந்து படித்தல் கூடும்

 

ஒருநாளுக்கொரு பாடல் மனனம் என்று

உறுதியுற முடிவெடுத்து வாரம் போகும்

பெருநோயாய் மறதிவரும் பெரும் போர் செய்யும்

பேணியதாம் இலட்சியமும் பொய்த்தே போகும்

ஒரு பந்தி படித்தாலும் போதும் என்று உட்கார

ஓங்கிய என் ரெலிபோன் கத்தும்…………

அருந்தவமாய் அறிவதனை அணுகும் பாங்கை  

ஆண்டவனே அருள் எனக்கு நீயே தஞ்சம்

 

நெல்லருகே நின்றதனின் வளத்தை மாந்தும்  

நீசகுணப் புல்லைப்போல்ப் பொழுதைத் தின்று

தொல்லைதரும் தொலைபேசித் தொடுகை விட்டுத்

தோசமென ஒருவாரம் தொலைவில் நின்றேன்  

அல்லலிலா அமைதி சுகம்  அதனைச் சொல்ல

ஆன்றதமிழ்க் கவிதைக்கும் வலிமை இல்லை

கல்லென நான் உறைந்தபடி காலை மாலை

கணக்கிறந்த நூல்பலதை கற்றேன் உண்மை

 

பெருக்கெடுத்த அறிவருவிச் சுணையில் நீந்திப்

பேச்சற்றுப் பிரமையற்று மூழ்க வேண்டும்

நெருப்படுத்த நெய் போலே நெகிழ்ந்து சிந்தி

நேரெழுந்து அறிவுயர உதவ வேண்டும்

விருப்பெடுத்து விரிந்த உலகு அதனுள் எய்தி

விந்தை சுகம் கண்டதனில் லயிக்க வேண்டும்

கருத்தெடுத்த இலட்சியமாம் கம்பன் வாழ்வு

காலத்தை வென்றென்னுள் நிலைக்க வேண்டும்

 

 

Share :
Tag :
Comments